Ad Code

10th tamil Important 2 marks study material

 

பத்தாம் வகுப்பு -இரண்டு மதிப்பெண் குறுவினாக்கள்-
10 TH STD  2 MARK QUESTIONS  ANSWERS - | kaTrathukalvi - samacheer Kalvi Guide

இயல் - 1

புத்தக வினாக்கள் தொகுப்பு -இயல் - 1 முதல் 9 வரை

1. ' வேங்கை '  என்பதைத்  தொடர்மொழியாகவும்  பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .
தனிமொழி :  'வேங்கை'  என்னும் சொல்  தனித்து நின்று ' வேங்கை மரம்'  என்னும் பொருளைக் குறிக்கும் .
தொடர்மொழி :  'வேங்கை' -   இரு சொல்லாக  பிரிந்து நின்று  வேம் + கை -  வேகின்ற கை  எனவும் பொருள் தரும் .
பொதுமொழி :  இவ்வாறு  மரம் ,  வேகின்ற கை என இரு பொருள்களுக்கும்  பொதுவாய் அமைவதால்  பொது மொழியாக  இருக்கிறது .

2. ' மன்னும் சிலம்பே !  மணிமேகலை வடிவே !
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே ! -  இடம்பெற்றுள்ள ஐம்பெரும் காப்பியங்களைத்  தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின்  பெயர்களை எழுதுக .
1 .  சீவகசிந்தாமணி
2 .  வளையாபதி
3. குண்டலகேசி

3. ஒரு தாற்றில்  பல சீப்பு  வாழைப்பழங்கள் உள்ளன .
ஒரு சீப்பில்  பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன .
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன .- மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி , எஞ்சிய பிழையான  தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக .
*  ஒரு தொடரில் பல  சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன . -  இது சரி .
* ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன  -  இது தவறு .
 ஏனெனில், தாற்றில் தான் வாழைப்பழ  சீப்புகள் இருக்கும் .
* ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன -  இது சரி .

4.'" உடுப்பதூஉம் உண்பதூஉம்  காணின் பிறர்மேல்
வடுக்காண்  வற்றாகும் கீழ் " -  இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச்  சுட்டி ,  அதன் இலக்கணம் தருக .
உடுப்பதூஉம் ,  உண்பதூஉம் -  இன்னிசை அளபெடை

இலக்கணம் :  செய்யுளில் ஓசை குறையாத  இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது  இன்னிசை அளபெடை ஆகும் .  இக்குறளில்  உண்பதும் -  உடுப்பதும் -  இனிய இசைக்காக ,  அளபெடை கூட்டப்பட்டிருக்கிறது .

5. தற்கால உரைநடையில்  சிலேடை அமையும் நயத்திற்கு  ஓர் எடுத்துக்காட்டு தருக .
      காலை நேரம் தொடர்வண்டியில் வநது இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும்   அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .

இயல் - 2

6. ' நமக்கு உயிர் காற்று
     காற்றுக்கு வரம் மரம் -  மரங்களை
    வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் '-
இதுபோன்ற  உலகக் காற்று நாள்  விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை  எழுதுக.
1.  மனித உடலுக்குள்
     உள்ளிருக்கும் காற்றே !
      உன்னை மாசடையாமல்
      பார்த்துக்  கொள்வது
      மனித இனத்தின்
       கடமை  !

2.   மனிதன் சுவாசிப்பதால்
         உயிர்   வாழ்கிறான் !
       இலைகள் சுவாசிப்பதால்
        மரங்கள் வாழ்கின்றன !
        மரங்களும் வாழ....
        மனிதர்களும் வாழ.....
        மரம் நடுவோம்... சுத்தமான
         காற்றைப் பெறுவோம் !!

7. வசன கவிதை -  குறிப்பு வரைக .
* உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு  அப்பாற்பட்டு உருவாக்கப்படும்  கவிதை வடிவமே வசனகவிதை எனப்படும் .
*   ஆங்கிலத்தில் prose poetry  என்றழைக்கப்படும் .
*  இதுவே ,  புதுக்கவிதை உருவாக காரணமாயிற்று .

8. தண்ணீர் குடி ,   தயிர்க்குடம்   ஆகிய தொகைச்சொற்களை   விரித்து எழுதுக;  தொடரில் அமைக்க .
விரித்து எழுதுதல்  ;
            தண்ணீர் குடி -  தண்ணீரைக் குடி
            தயிர்க்குடம்  -   தயிரை உடைய குடம்
தொடர்  :
          சீதா  தயிரை உடைய குடத்தை எடுத்து வந்தாள் .

9. பெற்றோர் வேலையிலிருந்து திரும்ப தாமதமாகும் போது அழும் தம்பிக்கு  நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுது  .
*  வேலைக்குச் சென்ற தாயும் தந்தையும் திரும்பி வருவதற்கு  காலதாமதம் ஆகும்  நாட்களில் ,  அழும் தம்பியிடம்  அன்பாகப் பேசுவேன் . அவனுடன் விளையாடுவேன் .  அம்மாவும் அப்பாவும் நமக்காக  வேலைக்குச் சென்று  உழைப்பதை  எடுத்துக் கூறுவேன் . உனக்கு பிடித்த  சாக்லேட் ,  பழங்கள் வாங்கி வருவார்கள்  என்று ஆறுதல் கூறுவேன் .

10 .மாஅல்  -  பொருளும் இலக்கணக்குறிப்பு தருக .
பொருள்  :  திருமால் -  மண்ணுக்கும் விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்கும் திருமால் .
இலக்கணக்குறிப்பு  : இசைநிறை அளபெடை  அல்லது செய்யுளிசை அளபெடை .

இயல் -  3

11. விருந்தினரை   மகிழ்வித்துக் கூறும்  முகமன் சொற்களை எழுதுக .
*  வருக...... வருக..  வணக்கம்..
*  நலமாக உள்ளீ்ர்களா ? வீட்டில் அனைவரும் நலமா ?
*  நீங்கள் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது . உட்காருங்கள் !
*  முதலில் நீர் பருகுங்கள்  ;  தேநீர்  அருந்துங்கள் ...
* எங்கள் இல்லத்திற்கு வந்தது  பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது .
*   கண்டிப்பாக  உணவு உண்ட பின்பு தான் செல்ல வேண்டும் .
   போன்ற வார்த்தைகளை   முக மகிழ்ச்சியோடு  கூற வேண்டும் .

12 .  தானியம் ஏதும் இல்லாத நிலையில்  விதைக்காக வைத்திருந்த  தினையை உரலில் இட்டுக்  ஒற்றி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள்  தலைவி என்பது இலக்கிய செய்தி . விருந்தோம்பலுக்குச்  செல்வம் மட்டுமே  இன்றியமையாத ஒன்றா ?   உங்கள் கருத்தை குறிப்பிடுக .
  * இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த  சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை .   எனவே,  அன்று விரித்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து அரிசியாக்கி ,  பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது .
*  எனவே விருந்தினருக்கு விருந்து படைக்கச்  செல்வம் தேவையில்லை . நல்ல மனம் இருந்தால் , நம்மிடம் உள்ளதைக் கொண்டு  சிறந்த முறையில் விருந்து அளிக்க முடியும்  என்பதாகும் .

13 . ' எழுது என்றாள்'  என்பது விரைவு காரணமாக ' எழுது  எழுது  என்றாள் '  என  அடுக்குத்தொடரானது . ' சிரித்துப் பேசினார்' என்பது  எவ்வாறு அடுக்குத்தொடராகும் ?
' சிரித்துச் சிரித்துப் பேசினார் 'என்பது மகிழ்ச்சி காரணமாக அடுக்குத்தொடரானது .

14 .  ' இறடிப் பொம்மல் பெறுகுவிர் ' -  இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக .
இறடி -  தினை  ;  பொம்மல் -  சோறு
இறடிப் பொம்மல் பெறுகுவிர்  - தினைச் சோற்றைப்  பெறுவீர்கள்  எனப் பொருள்படும் .

15 . பாரதியார் கவிஞர்,  நூலகம் சென்றார் . அவர் யார் ?  ஆகிய தொடர்களில் எழுவாயுடன்  தொடரும் பயனிலைகள் யாவை ?
            எழுவாய் உடன் பெயர் ,  வினை , வினா  ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும் .
* பாரதியார் கவிஞர் - பெயர்
* நூலகம் சென்றார் -  வினை
* அவர் யார் ?  -  வினா
           மேற்கண்ட  முன்று தொடர்களில் எழுவாயுடன் பெயர் , வினை ,  வினா ஆகியவற்றிற்கான  பயனிலைகள் தொடர்ந்து வந்து  எழுவாய் தொடர்கள் அமைந்துள்ளன .
 

திருக்குறள் -  குறுவினாக்கள்

16. ' நச்சப் படாதவன் ' செல்வம் -  இத்தொடரில்  வண்ணமிட்ட சொல்லுக்குப்  பொருள் தருக .
நச்சப் படாதவன் -  பிறருக்கு உதவி செய்யாதவன் . 
பிறருக்கு உதவி செய்யாததால்  ஒருவராலும் விரும்பப்படாதவர்  பெற்ற செல்வம்  என்பது பொருள் .

17.  கெடுப்பதூஉம் துய்ப்பதூஉம்  இல்லார்க்கு அடுக்கிய
       கோடிஉண் டாயினும் இல் .         -  இக் குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக .

கொடுப்பதும் ,  துய்ப்பதூஉம் -  இன்னிசை அளபெடைகள்

18 . பொருளுக்கேற்ற அடியை பொருத்துக .
1.  உயிரை விட சிறப்பாக பேணி காக்கப்படும் .  -  உயிரினும் ஓம்பப் படும் .
2 . ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்தது போன்றது . -  நடு ஊருள்  நச்சு மரம் பழுத்ற்று .
3 . ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் . -  ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை .

19 .  எய்துவர் எய்தாப் பழி -  இப்படிக்கு பொருந்தும் வாய்பாடு எது ?
 அ )  கூவிளம் தேமா மலர்

இயல் - 4

20 . வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற  செயற்கை நுண்ணறிவு பொதிந்த  இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்  குறிப்பிடுக .
எ.கா :  செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள் .

1 . செயற்கை நுண்ணறிவால் இயங்கும்  கட்டுமான தொழிலாளர்கள் .
2 . செயற்கை நுண்ணறிவால் இயங்கும்  எரிபொருள் நிலையங்கள் .

21 .  வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச்  செல்கிறேன் . _  இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு ?
    *  இத்தொடர்.. கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் 'செல்வேன்'எனக் கூறுதல் வேண்டு்ம்.ஆனால் 'செல்கிறேன்'என க் கூறியுள்ளது காலவழுவமைதியாக அமைகிறது .
*        செல்கிறேன் - நிகழ்காலம் ,செல்வேன் - எதிர்காலம் .
 எனவே இலக்கணப்படி பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் செல்வதன் உறுதி்த்தன்மையை நோக்கி காலவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

22 .  மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுதுக .
*  நோய் நீங்க " மருந்து பாதி மருத்துவம் பாதி "   என்பர் .
*  மருத்துவத்தில் மருந்தால் மட்டுமே நோய் நீங்காது .மருத்துவர் பேசும்                  வார்த்தைகளே நோயாளிக்கு நம்பிக்கை அளிக்கும்
*  நோயின் இயல்பறிந்து நம்பிக்கையோடு மருத்துவர் அளிக்கும் மருத்துவம்        விரைவில் நோய் தீரும் .

24 . உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப்  பரிபாடல் வழி அறிந்தவற்றை குறிப்பிடுக .
  *    பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான பேரொலியுடன்  தோன்றி ,  காற்று ,  வானம்  முதலிய பூதங்களின் அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து ,  ஊழிக் காலங்களை கடந்து , நெருப்பு பந்து போல  ஊழிக்காலம் தொடர்ந்தது .
*  பின்னர் பூமி குளிரும்படி தொடர்ந்து பெய்த மழையால்  மீண்டும்  மீண்டும் வெள்ளத்தில் மூழ்குதல்  நடந்த  இப்பெரிய உலகத்தில்,  உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி ,  நிலைபெறும்படியான  ஊழிக்காலம் வந்தது என பரிபாடல் கூறுகிறது .

25. " சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான் .  புதியவர்களைப் பார்த்துக் கத்துவனே  தவிர கடிக்க மாட்டான் "  என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினார் .-  இதில் உள்ள  திணை வழுக்களைத் திருத்தி எழுதுக .
 *  சீசர் என்பது  நாயைக் குறிப்பதால்  இதனை அஃறிணை  வினைகளாகக் கூற வேண்டும் .
*   ஆனால் இத்தொடரில் உயர்திணை வினைகள் ஆக   கேட்பான் ,  கத்துவான்,  கடிக்க மாட்டான் எனக் கூறப்பட்டுள்ளது .
*   இவை முறையே  கேட்கும் ,  கத்தும் ,  கடிக்காது  எனக் கூறுதல் வேண்டும் .


இயல் -5

26 ." கழிந்த பெரும்  கேள்வியினான்  எனக் கேட்டு  முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு  கேன்மையினான்  இடைக்காட்டுப்  புலவன்  தென்சொல் "
  -  இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார் ?  காதல்மிகு கேன்மையினான் யார் ?
கழிந்த பெரும் கேள்வியினான் -  மன்னன் குசேல பாண்டியன்
காதல்மிகு  கேன்மையினான் -  புலவர் இடைக்காடனார்

27 . செய்குதம்பிப் பாவலரின்  கல்வி பற்றிய   கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக .
அருளைப் பெருக்கி
அறிவை சீராக்கு.
மயக்கம்  அகற்றி
அறிவுக்கு தெளிவு தா.
உயிருக்கு அரிய துணை
இன்பம் சேர்க்கும்
கல்வியைப்  போற்று !

28 . அமர்ந்தான் -  பகுபத உறுப்பிலக்கணம் தருக .
அமர்ந்தான் -   அமர் + த் (ந் ) + த் + ஆன்
அமர் - பகுதி
த் - சந்தி 'ந் ' ஆனது விகாரம்
த் -  இறந்தகால இடைநிலை
ஆன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி

29 . தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக்  குறிப்பிட்டுக் காரணம் எழுதுக .
 * தாய்மொழியும்  ஆங்கிலமும் தவிர  நான் கற்க விரும்பும் மொழி  கன்னடம் .
*   ஏனெனில்,  கன்னட  மொழியில்  நூல்களைப் படித்து ,  அம்மொழியின் வளர்ச்சி , பண்பாடு , வரலாறு , தொழில்கள் ,  மக்களின்  பண்பு நலன்கள் ஆகியவை பற்றி தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்புகிறேன்.

30 . இந்த அறை இருட்டாக இருக்கிறது.
வரையில் மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது ?  இதோ.... இருக்கிறதே !  சொடுக்கியைப் போட்டாலும்  வெளிச்சம் வரவில்லையே !  மின்சாரம் இருக்கிறதா , இல்லையா ?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக .
*  மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் உள்ளது ? - அறியா வினா
*  மின்சாரம் இருக்கிறதா , இல்லையா ?  -  ஐய வினா

இயல் - 6

31 . காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு  மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும் .  இத்தொடரில் அமைந்துள்ள  முதற்பொருள், கருப்பொருள்களை  வகைப்படுத்தி எழுதுக .
 முதற்பொருள் :
நிலம் -  காடும் காடு சார்ந்த இடமும் -  முல்லை
பெரும்பொழுது -   மழைக்காலம் ,  கார்காலம்
சிறுபொழுது -  மாலைப்பொழுது
கருப்பொருள் :  உணவு -  வரகு .

32 ." நேற்று நான் பார்த்த  அருச்சுனன்  தபசு என்ற கூத்தில்  அழகிய ஒப்பனையையும்   சிறந்த நடிப்பையும்  இனிய பாடல்களையும்  நுகர்ந்து மிக மகிழ்ந்தேன் ! "  என்று சேகர் என்னிடம் கூறினான் . இக்கூற்றை அயர்கூற்றாக எழுதுக. 
  முன்தினம்  அவன் பார்த்த 'அர்ச்சுனன் தபசு '  என்ற கூத்தில்  அழகிய ஒப்பனையையும் ,  சிறந்த நடிப்பையும்  இனிய பாடல்களையும்  நுகர்ந்து  மிக மகிழ்ந்ததாகச்  சேகர் என்னிடம் கூறினான் .

33. உறங்குகின்ற கும்பகன்ன "  எழுந்திராய் எழுந்திராய் "
காலதூதர் கையிலே "  உறங்குவாய் உறங்குவாய் "
கும்பகன்னனை  என்ன சொல்லி எழுப்புகிறார்கள் ? எங்கு அவனை உறங்கச்  சொல்கிறார்கள்  ?
*  "உறங்குகின்ற கும்பகன்னனே!பொய்யான உன் வாழ்வு அழியத் தொடங்கிவிட்டது.அதனைக் காண எழுந்திருப்பாயாக " என்று எழுப்புகின்றனர்.
* "காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்து எமதூதர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக " என்று கம்பர் இயற்றியுள்ளார் .

34 . சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்  சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் -  கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக .
*  ஒல்லியான தண்டில் ,  மிக  மென்மையான மலர் இருப்பது  இயற்கையின் வரம் .
*   மலரின் தண்டை விட  மலர் பெரியதாக  இருந்தாலும்  ,  தண்டு அதனை தாங்கிக் கொள்கிறது .
* எனவே , மென்மையான அன்பே  இந்த உலகைக் காத்து நிற்கிறது   எனக் கவிஞர்  இவ்வரிகளில் விளக்குகிறார் .

35 . கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக .
உழவர்கள் மழையின் உழுதனர் .
  முல்லைப் பூச் செடியைப்  பார்த்தவாரே பரதவர் கடலுக்குச் சென்றார் .
உழவர்கள் வயலில் உழுதனர்.
முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே ஆயர்கள் காட்டிற்குச் சென்றனர் . [முல்லைத் திணை ]
                                                    (அல்லது)
உழவர்கள் வயலில் உழுதனர்.                                           
நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் .            [நெய்தல்  திணை ]           
 (அல்லது)
உழவர்கள் வயலில் உழுதனர். 
தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் .
[நெய்தல்  திணை ]   

திருக்குறள் -  குறுவினாக்கள்

36 . கரப்பிடும்பை இல்லார் -  இத்தொடரின் பொருள் கூறுக .
" தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல்  என்னும்  துன்பம் தராத  நல்லவர் "  என்பது பொருள் .


37 . தஞ்சம் எளியன் பகைக்கு -  இவ்வடி குரிய அசைகளையும்  வாய்பாடுகளையும் எழுதுக .
சீர்        -          அசை      -   வாய்பாடு
தஞ் | சம் -   நேர் - நேர்  - தேமா
எளி | யன் -   நிரை  - நேர்  - புளிமா
பகைக் | கு -   நிரைபு --  பிறப்பு

38 . வறுமையின் காரணமாக உதவிகேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன ?
            வறுமையின்  காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடாமல்  கொடுப்பவரைக் கண்டால் , இரப்பவரின் உள்ளத்திலே மகிழ்ச்சிப் பொங்கும் .

39 . பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார் ?  ஏன் என்பதை எழுதுக .
*  உழைத்தால் கிடைக்கும் ஊதியத்தைக்  கூரான ஆயுதம் என்று செந்நாப்போதார் கூறுகிறார் .
*  பகைவரின்   ஆணவத்தை அழிக்கும் வாள்  பொருளே ஆகும் . அதைவிட வலிமை உடையது எதுவுமில்லை . எனவே ,  பொருளை உழைத்து  ஈட்ட வேண்டும் என்று  செந்நாப்போதார்   கூறுகிறார் .

இயல் - 7

40 . பாசவர் ,  வாசவர் ,  பல்நிண விலைஞர் , உமணர் -  சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள் யாவர் ?
பாசவர் -  வெற்றிலை விற்பவர் .
வாசவர் -  ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள்கள் விற்பவர் .
பல்நிண விலைஞர் -  பலவகையான இறைச்சி விற்பவர்
உமணர் - வெண்மையான உப்பு விற்பவர் .

41 . மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது ?
*அரசர்கள்  தங்கள் வரலாறும் பெருமையும்  கடந்து நிலைக்க ,  அழியாத வகையில் அதனை கல்லில் செதுக்கினார்கள்  .
*  தங்களின் செய்திகளைக்  கல்வெட்டுகளிலும்  செப்பேடுகளிலும் பொறித்து  வைத்துள்ளனர் . இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவது நோக்கமாகும் .

42 . வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம. பொ .சி . என்பதற்கு சான்று தருக .
* ம.பொ.சி  குடும்பத்தின் வறுமையால்   நூல் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று விருப்பமான புத்தகங்களை விலைக்கு வாங்குவதை  வழக்கமாக்கிக் கொண்டார் .
*   உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில்  புத்தகங்கள் வாங்கிவிட்டு ,  பல வேளைகளில் பட்டினி கிடந்து ,  குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்ததே என்று  பேரானந்தம் அடைவார் .
*  தன் வாழ்நாளில்  முயன்று சேர்த்து வைத்துள்ள  சொத்துக்கள்  பல்லாயிரக்கணக்கான நூல்களைத்  தவிர வேறில்லை  என்று உறுதியாக கூறி இருப்பது வறுமையிலும் மீது நாட்டம் கொண்டவர் மா.பொ.சி . என்பதற்குச் சான்று ஆகும் .

43 . புறத்திணைகளில் எதிரெதிர்  திணைகளை அட்டவணைப்படுத்துக .
புறத்திணைகள் எதிரெதிர் திணைகள்:
வெட்சி ×  கரந்தை
வஞ்சி ×  காஞ்சி
உழிஞை ×  நொச்சி

44 . பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
   பழங்காலத்திலே  பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி  நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி  விடுதலைப் போரில்  ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் . - ம. பொ .சி .

விடை  : ப. எண் : 161
        பழங்காலத்திலே  பாண்டியன்  ஆண்ட பெருமையைக் கூறி ,  சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி '  சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி ,   நம் அருமைத் தமிழ்நாடு , ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப்போரில்  ஈடுபட வருமாறு  தமிழர்க்கு  அழைப்பு விடுத்திருந்தேன் . - ம. பொ .சி .


இயல் -  8

45.' கொள்வோர் கொள்க ;  குரைப்போர் குரைக்க !
உள்வாய் வார்த்தை  உடம்பு தொடாது '
அ)  அடி எதுகையை எடுத்தெழுதுக .
ஆ)  இலக்கண குறிப்பு எழுதுக  -  கொள்க ,  குரைக்க
அ)அடி எதுகை  :
கொள்வோர்  ,  உள்வாய்
ஆ )இலக்கண குறிப்பு :
கொள்க ,  குரைக்க -  வியங்கோள் வினைமுற்று

46 . குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக .
*குறள் வெண்பாவின் பொது இலக்கணம்  அமையப் பெற்று ,  இரண்டு அடிகளாய் வரும் .
*   முதலடி நான்கு சீராகவும் ( அளவடி ) இரண்டாம் அடி மூன்று சீராகவும் ( சிந்தடி ) வரும் .
எ.கா : 
            உலகத்தோ டொட்ட ஒழுகல்  பலகற்றும்
            கல்லார் அறிவிலா தார் .

47.  குறிப்பு வரைக - அவையம் .
*அறம் கூறும் மன்றங்கள்  அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன . அவையே  'அவையம் ' என்று அழைக்கப்பட்டன .
*  அறம் ,  அறக்கண்ட நெறிமான் அவையம் '  என்கிறது புறநானூறு .
*  உறையூரிலிருந்த அறஅவையம்  தனிச்சிறப்பு பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .
*   மதுரையில் இருந்த அவையம்  பற்றி 'மதுரைக்காஞ்சியில் '  அவை துலாக்கோல் போல  நடுநிலை மிக்கது   எனக் குறிப்பிடுகிறது .

48 . காலக் கழுதை கட்டெறும்பானதும்  கவிஞர் செய்வது யாது ?
   *அன்று  சாளரத்தைத்  தூய்மை செய்த கவிஞர் ,
*  இன்று  காலக் கழுதை கட்டெறும்பானாளும்  வாளித் தண்ணீர் , சாயக் குவளை ,  கந்தை துணி , கட்டைத் தூரிகை கொண்டு  அறப்பணிகள் செய்கிறார் .
49. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை  தூங்கலோசை ஆகும் .  துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது . இத்தொடர்களை  ஒரே தொடராக இணைத்து எழுதுக .
        வஞ்சிப்பாவிற்குத்   தூங்கல் ஓசையும் ,  கழிப்பாவிற்கு  துள்ளல் ஓசையும்  உரியன .

இயல் -9

50. தீவக அணியின் வகைகள் யாவை ?
தீவக அணி  மூன்று வகைப்படும் ; அவை
1 . முதல் நிலைத் தீவகம்
2 .  இடைநிலைத் தீவகம்
3.  கடைநிலை தீவகம்

51.  நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு . இத்தொடரை இரு தொடர்களாக்குக .
*  நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் உண்டு .
*  நான் எழுதுவதற்கு அதற்குரிய காரணமும் உண்டு .

52. "காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் " உவமை உணர்த்தும் கருத்து யாது ?
*" இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து  நெல்மணிகளைக் காணும் முன்னே  தூயமணி போன்ற தூவும் மழை துளி இல்லாமல் வாடி காய்ந்து விட்டதைப் போல "  என்பது உவமையின் பொருள் .
*  அதுபோல, " கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே ,  தன் தாயை இழந்தது  வாடுகின்றான் " என்பதை இவ்வுவமை உணர்த்துகிறது .

53 . அன்பும் அறனும்  உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது . -   இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது ?
*  இக்குறளில்  நிரல்நிறை அணி  வந்துள்ளது .
*  இக்குறளில்  சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி ,  அதே வரிசைப்படி  இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறியுள்ளதால் இது  நிரல்நிறை  அணி ஆகும் .
*  இக்குறள் அன்பைப் பண்புக்கும் ,
              அறத்தைப் பயனுக்கும்  நிரல்நிறையாக  அமைந்துள்ளது .

54. ' வாழ்வில் தலைக்கனம் , தலைக்கனமே வாழ்வு ' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார் ?
*  உலகில் பணம் ,  பதவிகளால்  தலைக்கனம் பிடித்தவர்கள்   பலர் உண்டு .
*   "தலைக்கனமே வாழ்வு " என சித்தாளுவின் வாழ்வைக் குறிப்பிடுகிறார் .
*  அடுத்தவேளை உணவுக்காக  அடுக்குமாடி கட்டிடம் எதுவாயினும்  செங்கற்களை தலையில் சுமந்து செல்லும்  சித்தாளுக்கு "தலைக்கணமே வாழ்வாகிப் போனது"  என  நாகூர் ரூமி குறிப்பிடுகிறார் .







*****************************************
10th Tamil Guide ,10th Tamil important 2 marks question, 10th Tamil important study material, 10th Tamil full guide,10th Tamil notes,10th Tamil slow learners study material, 10th Tamil guide PDF download, 10th Tamil online study material, 10th Tamil important questions, 10th Tamil guide important questions and answer ,10th Tamil important 2 mark questions PDF download, 10th Tamil repeated question,

Post a Comment

0 Comments

Ad Code